நாகர்கோவில், மே 14
நாகர்கோவில் மாநகராட்சியில் சுமார் 48 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது. நாளொன்றுக்கு 42 எம்எல்டி தண்ணீர், முக்கடல் அணை மற்றும் புத்தனாறு அணையில் இருந்து பெறப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது. 3 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர், தட்டுப்பாடு காரணமாக 5 நாட்களாக அதிகரித்து, பின்னர் தற்போது 7 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படுகிறது. இதை படிப்படியாக குறைத்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் உதவி பொறியாளர் ரகுராமன் ஆகியோர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்தனர்.
பின்னர் ஆணையர் கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சியில் 7 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படும் குடிநீரின் கால அளவை குறைத்து வழங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் வால்வு ஆபரேட்டர்கள் மற்றும் பிட்டர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. குடிநீர் விநியோகத்தின் கால அளவு படிப்படியாக குறைக்கப்படும் என்றார்.