தக்கலை, செப். 16 –
தக்கலை அருகே ஈத்த விளை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (30) கொத்தனார். இவர்
ஆறரை ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஜேசு சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது முட்டைக்காடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். துரைராஜுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஜேசு சௌந்தர்யா தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மனைவி மீது சந்தேகம் ஏற்பட்ட துரைராஜ் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஜேசு சௌந்தர்யா தனது குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் குழந்தைகளின் படிப்புக்காக ஆசிரியர் அழைத்ததன் பேரில் ஜேசு
சௌந்தர்யா முட்டைக்காடு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று மாலை வந்தார். அப்போது வீடு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெளியில் நின்று கணவரை அழைத்துள்ளார். எனினும் அவரிடம் இருந்து எந்த வித பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்தவர் அப்பகுதியில் உள்ளவர்கள் உதவியுடன் வீட்டை உடைத்து பார்த்த போது துரைராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. தற்கொலை செய்து சில தினங்கள் ஆகி இருக்கும் என தெரிகிறது. இதையடுத்து கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துரைராஜ் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



