தருமபுரி மாவட்டத்தில் பொது விநி யோகத் திட்டத்தின் கீழ், தரமான அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்கு, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் நல்லம்பள்ளி கிடங்கில் ஆட்சியர் சதீஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி,கோதுமை உள்ளிட்ட பொருட்களின் தரம் மற்றும் மூட்டைகளின் எடை அளவு சரியாக உள்ளதா என்பது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார். இக்கிடங்கில் 13,727 மெட்ரிக் டன் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் உள்ளது. இதை தொடர்ந்து லளிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை பிரிவு, மருந்து வழங்குமிடம் ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி பெட்டகத்தில் உள்ள ஊட்டச்சத்து பொருட்களின் தரம் மற்றும் காலாவதி தேதி குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் நல்லம்பள்ளி, கோவிலூர் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டை பார்வையிட்டு பயனாளிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார். இந்த ஆவியின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் சாகுல் ஹமீத், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாளர் செல்வி, நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்குமார், பிடிஒக்கள் நந்தகோபால், இளங்குமரன், வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.



