ஆரல்வாய்மொழி ஜன 23
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, பரிசோதனை மேற்கொண்டு, நோய் பாதிப்படைந்தவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தோவாளை வட்டம் பண்டாரபுரத்தை சேர்ந்த பழனி, விஜயா ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று, மக்களைத்தேடி திட்டத்தின் கீழ் செவிலியர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து, பரிசோதனை மேற்கொண்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என்று கேட்டறியப்பட்டது. மேலும் சிகிச்சையின் தற்போதைய நிலைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது
அதனைத்தொடர்ந்து ஆரல்வாய்மொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை முறைகள் குறித்தும், மேலும் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை, கர்ப்பிணி பெண்களுக்கு செய்யப்பட்ட ஸ்கேன் சேவைகள், ஆய்வக பரிசோதனைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், இரத்த சோகை வராமல் தடுப்பதற்கு இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறா என்பது குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது.
மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பிராபகரன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராஜ்குமார், மருத்துவ குழுவினர். மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் இருந்தனர்.