நல்லூர், பிப். 24 –
தமிழ்நாடு சட்டசபையில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கேள்வி நேரத்தில் பேசியபோது: கன்னியாகுமரியில் கடைகள் அகற்றப்பட்டதால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கன்னியாகுமரி நகராட்சிக்கு சொந்தமான பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் கடைகளை அந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வியாபாரிகள் பாதிக்காத அளவுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில், கன்னியாகுமரி அனைத்து கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் தம்பி தங்கம், தலைமையில் பொருளாளர் சேவியர் ராஜன் சங்க உறுப்பினர்கள் பெருமாள், பாலகிருஷ்ணன், பீர்முகமது, சிவா, முருகேசன், ராமன், நவாஸ், ரமேஷ், அமர், குருசாமி ஆகியோர் நாகர்கோவிலில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.



