ஊட்டி.ஜன. 21.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து நகர் பகுதியை கடந்து மைசூர், பெங்களூர், கேரளா மாநிலங்களுக்கு ஏராளமான சரக்கு லாரிகள் மற்றும் வாகனங்கள் செல்கின்றன. கூடலூர் நகராட்சி பகுதியான கூடலூரில் சமீபகாலமாக அதிகமான வாகன விபத்துக்கள் போக்குவரத்து சாலைகளால் ஏற்படுவதோடு குண்டும் குழியுமாக மாறிவிட்டன. மழை பெய்தால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மாதங்களில் நகர் புற சாலையை செப்பனிடகோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருவதோடு அப்பாவி மக்கள் உயிர் பலியாவதை தடுத்து காப்பாற்றுமாறு நகராட்சிக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை கூடலூர் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் கூடலூர் மனதுர்கா பகுதியை சார்ந்த சாமுவேல் அவரது மகன் விகில் வர்ஷன் (7) இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது நகர்ப்புற பகுதியில் சென்று கொண்டிருந்த கனரக லாரி நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக லாரி இருவர் மீதும் ஏறியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிர்ச்சியும், அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இருவரும் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிணக்கூறு ஆய்வு செய்யப்பட்டு காவல் துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு வசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கூடலூர் வியாபாரிகள் சங்க தலைவர் தாமஸ் மற்றும் வணிகர் சங்க இணை செயலாளர் அப்துல் ரசாக் கூறுகையில் கூடலூர் நடைபாதை ஓரங்களில் ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல பெரும் சிரமமாக இருப்பதோடு இது சம்பந்தமாக நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததாலும் , சாலையை சீரமைக்காததாலும் இந்த விபத்து நடந்துள்ளதாக நகராட்சி மீது குற்றம் சாட்டினர். மேலும் இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி நகர்ப்புற சாலையை விரைவாக செப்பனிட கோரியும் கேட்டுக் கொள்வதோடு விரைவான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விரைவில் வணிகர் சங்கம் மற்றும் பொது மக்கள் மூலமாக நகராட்சியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.