புதுக்கடை, மார்ச் 9 –
புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லசாமி மகன் ராஜேஷ் (36). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்து வந்ததாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் புதுக்கடை பகுதியில் உள்ள ஒரு மதுபாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு குழித்துரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது தம்பி புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


