கருங்கல், டிச – 8
கருங்கல் அருகே சுண்டவிளை பகுதியை சேர்ந்தவர் முத்தையன் மகன் ஜஸ்டஸ் மார்ட்டின். இவர் டிராவல்ஸ் உரிமையாளர். இவர் 5-ம் தேதி கருங்கலில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவுக்காக சென்றுள்ளார். அப்போது பதிவாளர் (பொறுப்பு) அரிகிருஷ்ணன் என்பவர் பத்திரங்களை பார்வையிட்ட போது, ஜஸ்டஸ் மார்ட்டின் வழங்கிய ஆவணங்களில் பத்திர பதிவு சட்டம் 22 (A) (2)-ன் படி முரணாக இருந்துள்ளது. இதையடுத்து அரிகிருஷ்ணன் மாவட்ட பதிவாளரிடம் மேல் முறையீடு செய்ய ஜஸ்டஸ் மார்ட்டினிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (6-ம் தேதி) மதியம் மணியளவில் மறுபடியும் அலுவலகம் வந்த ஜஸ்ட்டஸ் மார்ட்டின் அங்கு தகராறு செய்து, அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். மேலும் அவர் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து அரிகிருஷ்ணன் மீது ஊற்றி, தீக்குச்சி பற்ற வைத்து அவர் மீது எறிந்து எரிக்க முயன்றார்.
ஆனால் நல்ல வேளையாக தீ பிடிக்கவில்லை. அரசு அலுவலர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் கருங்கல் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் விசாரித்து வழக்கு பதிவு செய்து, 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஜஸ்டஸ் மார்ட்டினை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அரசு அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.