நாகர்கோவில் ஜூலை 24
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாத்தியார்விளையை சேர்ந்தவர் ஸ்ரீ தர்ஷன் (22). கோயம்புத்தூரில் தனியார் கல்லூரி ஒன்றில் எம்ஏ ஆங்கில இலக்கியம் 2ம் ஆண்டு படித்து வந்த ஸ்ரீ தர்ஷன், கோவை பி.கே. புதூர் பகுதியில் வாடகைக்கு தனியாக வீடு ஒன்றை எடுத்து, அதில் தங்கியிருந்தபடி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், தனது கல்லூரியில் படித்து வந்த 19 வயது மாணவி ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்த ஸ்ரீ தர்ஷன், அவரைக் காதலிப்பதாக கூறி மாணவியை தான் தங்கியிருந்த வீட்டிற்கு அடிக்கடி அழைத்து சென்று, மாணவியுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது.
கோவையில் கல்லூரி மாணவர் ஒருவர், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து, கல்லூரி மாணவிகளிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி 20க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்தது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதர்சன் அதே கல்லூரியைச் சேர்ந்த 21 வயதான வேறொரு மாணவியுடன் நெருங்கி பழகி, அவரையும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் உறவு வைத்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் பின் இந்த 2 மாணவிகளையும் ஒதுக்கிவிட்டு வேறொரு மாணவியுடன் காதலிப்பதாக பழகியுள்ளார். அந்த மாணவியை பாலியல் உறவுக்கு வற்புறுத்திய நிலையில், யாருமில்லாத இடத்திற்கு தனியாக வர மாட்டேன் என அந்த மாணவி கடைசி வரை பிடிவாதமாக மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீ தர்ஷன் ஏற்கனவே அவரைக் காதலித்த மாணவிகளை மீண்டும் பாலியல் உறவுக்கு வற்புறுத்தியுள்ளார். அவர்கள் ஸ்ரீ தர்ஷனின் அடுத்தடுத்த காதல் லீலைகள் தெரிந்து ஒதுங்கி சென்ற நிலையில், இதற்கு உடன்பட மறுத்துள்ளனர். அப்போது பொது இடத்தில் அவர்களை ஆபாசமாக திட்டியதோடு, ”தன்னுடன் உல்லாசமாக இருக்க வராவிட்டால் பதிவு செய்து வைத்திருக்கும் உங்கள் உல்லாச வீடியோக்களை அனைவருக்கும் அனுப்பி விடுவேன்” எனக்கூறி மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் மாணவிகளிடம் ஸ்ரீ தர்ஷன் அத்துமீறிய விவகாரம் கல்லூரி முழுவதும் பரவ துவங்கியதில் பாதிக்கப்பட்ட 2 மாணவிகளும் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஸ்ரீதர்ஷன் மீது புகாரளித்தனர். இதையடுத்து போலீசார் பிஎன்எஸ் சட்ட பிரிவு 75, 79, 296 பி, 351 (2) (பாலியல் துன்புறுத்தல், தகாத முறையில் பேசுதல், மிரட்டுதல், வன்முறை செய்யும் வகையில் எச்சரித்தல்) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்ட பிரிவின் படி வழக்குப்பதிவு செய்து ஸ்ரீ தர்ஷனைக் கைது செய்தனர்.
இந்நிலையில், ஸ்ரீ தர்ஷன் தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனையிட்ட போது, ஏராளமான காண்டம் பாக்கெட்டுகள் கிடந்துள்ளன. இவர் பல மாணவிகளிடம் காதலிப்பதாகக் கூறி வீட்டிற்கு வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளதாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. 20க்கும் மேற்பட்ட மாணவிகளை இப்படி பழகி ஏமாற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஸ்ரீ தர்ஷனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது மாணவிகளின் ஏராளமான ஆபாச போட்டோக்களும், வீடியோக்களும் இருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளனர். இந்த வீடியோக்களையும், போட்டோக்களையும் அவர் யாருக்காவது அனுப்பியிருக்கிறாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவரின் காதல் வலையில் விழுந்த பல மாணவிகள் தங்களது எதிர்காலம் பாழாகிவிடும் என்ற பயத்தில் இது குறித்து யாரிடமும் சொல்லாமல் மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. மாணவிகள் மட்டுமின்றி அந்த பகுதியை சேர்ந்த வேறு சில பெண்களும் இவரின் காதல் லீலையில் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது.கல்லூரி மாணவிகள் காதல் போர்வையில் ஏமாற்றும் நபர்களிடம் மிகுந்த உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.