மதுரை, செப்.2.
ஜனசேனா கட்சியின் நிறுவனத் தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாணின் 55-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஜனசேனா கட்சி சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்ட பொறுப்பாளர் ராம்குமார் தலைமையில் நடைபெற்ற முகாமில், கட்சியின் இளைஞர் அணி நிர்வாகிகள் ராம்குமார், மணி, ஸ்டீபன் காளிதாஸ், சுந்தர் உள்ளிட்ட பல்வேறு இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட பொறுப்பாளர் ராம்குமார் கூறுகையில், தமிழகத்திலும் ஜனசேனா கட்சியின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி, மாற்றத்திற்கான வாய்ப்பை உருவாக்க பவன் கல்யாணின் பிறந்த நாளில் உறுதியேற்றுள்ளதாகவும் கூறினார். மேலும், ரத்ததான முகாம் நடத்த அனுமதி அளித்த அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மற்றும் ரத்த வங்கி துறைத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் பவன் கல்யாண் பூரண நலத்துடன் வாழ வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



