தூத்துக்குடி, ஜூன் 29 –
பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சையின் அடிப்படையில், அமைச்சர் சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தித் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 200-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் சரத்குமார், பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பழைய வீடியோ தொடர்பாக அவர் ஒரு விளக்க வீடியோவையும் வெளியிட்டிருந்தார். ஆனால், அவரது அந்த விளக்கமும் பொதுவெளியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து, அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்குக் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், தடையை மீறித் தூத்துக்குடி டூவி புரத்தில் வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன் மற்றும் தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருண்குமார் ஆகியோர் தலைமையில் திமுகவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆர்ப்பாட்டத்தில் மாநகரச் செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்த சேகரன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் கனகராஜ், கோகுல், ஆகாஷ், பிரதீபா, மாநகர மாணவர் அணி அமைப்பாளர் வினோத், துணை அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் ரவீந்திரன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, தூத்துக்குடி டவுன் காவல் கண்காணிப்பாளர் சுனில் தலைமையிலான காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அனைவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



