ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்ட பூங்கா பாழடைந்ததாக புகார்
நாகர்கோவில், செப். 1:
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட புளியடி பகுதியில், அம்ருத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்ட புளியடி பூங்கா தற்போது போதிய பராமரிப்பின்றி புதர் மண்டி கிடப்பதாக சமூக பொதுநல இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.
புத்தேரி குளக்கரையை ஒட்டி இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைக்கப்பட்ட இப்பூங்கா, பொதுமக்கள் பொழுதுபோக்கவும், சிறுவர்கள் விளையாடவும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டது. அப்போது மத்திய இணை அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் பூங்காவை திறந்து வைத்தார்.
ஆனால், தற்போது மாநகராட்சி சார்பில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் பூங்கா முழுவதும் புதர் மற்றும் முட்காடுகள் மண்டியுள்ளன. சிறுவர்கள் பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமடைந்துள்ளதுடன், கட்டுமானப் பகுதிகள் மற்றும் இரும்பு தடுப்பு கம்பிகளும் சிதைந்துள்ளன.
புதர்காடாக மாறியுள்ளதால் விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகளின் புகலிடமாக பூங்கா மாறியுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சம் காரணமாக பூங்காவை பயன்படுத்துவதை தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வருகை குறைந்ததால், பூங்கா தற்போது குப்பைகள் கொட்டும் இடமாக மாறி, துர்நாற்றம் வீசும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
மேலும், பூங்கா தற்போது சமூக விரோத செயல்கள் மற்றும் மது அருந்தும் இடமாக மாறி வருவதாகவும் சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. பல லட்சம் ரூபாய் மக்கள் நிதி செலவிடப்பட்ட நிலையில், அதன் நோக்கம் நிறைவேறாமல் இருப்பது வேதனைக்குரியது என்றும் தெரிவித்துள்ளனர்.
எனவே, புதர் மற்றும் முட்காடுகளை உடனடியாக அகற்றி, சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள், கட்டுமானங்கள் மற்றும் இரும்பு தடுப்புகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறிவியல் பூங்காவையும் புனரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புளியடி பூங்காவை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், தொடர்ந்து முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்க பொதுச்செயலாளர் சங்கரபாண்டியன் தலைமையிலான நிர்வாகிகள், குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



