நாகர்கோவில், 22.08.2026.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் பேச்சிப்பாறை அணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேற்று (ஆக.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பேச்சிப்பாறை அணைக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, 2026-27ஆம் ஆண்டிற்கான சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையில் ரூ.13 கோடி மதிப்பில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கான நவீன உணவகம், சுகாதாரமான கழிப்பறைகள், அழகிய நுழைவுவாயில், குழந்தைகள் பூங்கா, தொங்கு பாலம், பார்வையாளர் மாடம், காட்சி முனை மற்றும் பாதுகாப்பான நடைபாதைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்தனி வாகன நிறுத்துமிடங்கள், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி, பணிகளை விரைவில் தொடங்க அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், திருவட்டார் வட்டாட்சியர் மரகதவல்லி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அஜிதா, சுரேஷ்குமார், இளநிலை சுற்றுலா அலுவலர் வெள்ளசாமி, நீர்வளத்துறை பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



