நாகர்கோவில், நவ. 29 –
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் கல்குளம் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வட்டாட்சியர் அலுவலகம் நில அளவைத்துறை, வட்ட வழங்கல் அலுவலகம், சார்நிலை கருவூலம், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலகம், இ-சேவை மையம் கிராம நிர்வாக அலுவலகளும் போன்ற பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள், பெண்கள் போன்றவர்கள் தங்களுடைய பல்வேறு தேவைகளுக்காக அரசு அலுவலகங்களை நாடி வருகின்றனர்.
இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தின் அருகிலுள்ள கழிப்பறை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவில் நீண்டநாட்களாக பராமரிப்பின்றியும், சுகாதாரமில்லாமல் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்களின் நலனை கருதி கழிப்பறையை உடனடியாக சீரமைக்க வேண்டும் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



