அவிநாசி, ஆகஸ்ட் 11 –
ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் வண்ணமயமான ஆடைகளை அணிந்த குழந்தைகள் மேடையில் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
திருப்பூர் அருகே கணியாம் பூண்டியில் உள்ள தீரன் சின்னமலை மகளிர் கல்லூரியில் ட்ரிபிள் வாக் பேஷன் ஷோ நடைபெற்றது. இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியானது வயது அடிப்படையில் 2 பிரிவுகளில் நடைபெற்றது. குழந்தைகளுக்கான ஃபேஷன் ஷோவில் மூன்று வயது முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்துகொண்டு மிடுக்கான தோற்றத்துடன் வண்ண வண்ணமான ஆடைகள் அணிந்தும், ஒய்யாரமாக ஸ்டைலாக நடந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
தொடர்ந்து 10 வயது முதல் வயது வரம்பற்ற என்கிற பிரிவில் ஆடை அலங்கார அணிவகுப்பு மனதை ஈர்க்கக்கூடிய இசையுடன் நடைபெற்றது.
இதில் 8 தனியார் பள்ளியைச் சேர்ந்த 20 குழந்தைகளும், 20 கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 70 பேர் பேஷன் ஷோவில் கலந்துகொண்டு பார்வையாளர்களை அசத்தினர்.
பன்னாட்டு நிறுவனங்களின் தர அடையாளத்தை ஊக்குவிப்பது என்கிற நோக்கத்தின் அடிப்படையில் இந்த ஆடை அலங்கார அணி வகுப்பு நடைபெற்றது.
இந்த பேஷன் ஷோவில் கலந்து கொண்டு முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாவது இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோவை ஜே ஆர் டி நிறுவனர் ராஜேந்திரன், டிசைனிங் டைரக்டர் மோதிலால், பிப்பி ஷர்மா ஃபேஷன் பாக்ஸ் மணிகண்டன், கே.பி. பிளாக் மேங்கோ பார்மோ, பஞ்சாப் நவ் பிரீத் சிங் ஆகியோர் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினர்.



