விளாத்திகுளம், ஆக. 30:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் வைப்பார் ஆற்றுப்படுகையை ஒட்டிய பகுதியில், அரசு அதிகாரிகளின் துணையுடன் மணல் மாஃபியாக்கள் நள்ளிரவில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளுவதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி எபனேசர் குற்றம்சாட்டியுள்ளார்.
சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் 50 அடி ஆழம் வரை மணல் அள்ளப்படுவதாகவும், ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் மணல் கடத்தல் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், புகார் அளித்த பொதுமக்களின் தொலைபேசி எண்களை அதிகாரிகள் மணல் கடத்தல் கும்பலிடம் வழங்கி, அவர்களை மிரட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து எபனேசர் கூறுகையில், தனியார் வீட்டுமனை வழியாக சுமார் 30 அடி அகலத்தில் பாதை அமைத்து, இரவு முழுவதும் ஆற்றில் இருந்து மணல் அள்ளப்படுவதாக தெரிவித்தார். வைப்பார் ஆற்றில் தற்போது தண்ணீர் இல்லாததால் விளாத்திகுளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறைந்து அடுத்த ஆண்டும் குடிநீர் பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறினார்.
மேலும், மணல் கடத்தலுக்கு துணைபோகும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீதும், மணல் மாஃபியாக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எபனேசர் கோரிக்கை விடுத்துள்ளார்.



