நாகர்கோவில், ஆக. 5 –
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் விலங்கு நலனை உறுதி செய்யும் நோக்கில், ஆண் மற்றும் பெண் சமூக நாய்களுக்கான நிரந்தர கருத்தடை சிகிச்சைகள் மற்றும் வெறிநோய் எதிர்ப்பு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக இன்று கால்நடை பராமரிப்புதுறையின் கீழ் செயல்பட்டு வரும் கொட்டாரம் கால்நடை மருந்தக வளாகத்தில் செயல்பட்டு வரும் சமூக நாய்களுக்கான இனப்பெருக்க கட்டுபாடு அறுவை சிகிச்சை மையத்தில் சமூக நாய்களுக்கு தடுப்புசி செலுத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அவர் கூறுகையில்: அகஸ்தீஸ்வரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் மீட்டு வரும் சமூக நாய்களுக்கு கொட்டாரம் மருந்தகத்தில் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை அகஸ்தீஸ்வரம் ஊராட்சிக்குட்பட்ட 108 சமூக நாய்களுக்கு தடுப்புசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9442564469என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இதன்வாயிலாக தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவதோடு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் இணை இயக்குநர் கால்நடை பாராமரிப்புதுறை மரு.முனியசாமி, உதவி இயக்குநர் மரு.கிருஷ்ணசாமி, அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கமலாபாய், பத்மா, கொட்டாரம் பேரூராட்சி செயல் அலுவலர், கால்நடை மருத்துவர்கள், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



