தஞ்சாவூர், ஜூன் 23 –
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எல்.பழனியப்பன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் கே. செந்தில் குமார் முன்னிலை வகித்தார்.
இதில் தேர்தல் அறிக்கையில் தவெக கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு கட்டும் தடுப்பணைகள் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி காவிரியில் தமிழகத்துக்குரிய மாதாந்திர நீர் பங்கிட்டு உடனே வழங்க வேண்டும்.
விவசாயிகள் விளைவித்த நெல் மணிகளை தமிழக அரசு உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆழ்குழாய் மூலம் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர் கடன்களை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு உயர்த்தி உள்ள உரங்களின் விலையை திரும்ப பெற வேண்டும் வருகின்ற கொள்முதல் பருவத்தில் நெல்லுக்கு குவிண்டலுக்கு ரூபாய் 3500 விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
போராட்டத்தில் தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுந்தர விமலநாதன், சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம் மணி, ரவிச்சந்திரன் தெற்கு மாவட்ட பொருளாளர் சௌந்தர் ராஜன், மாநகர செயலாளர் அறிவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



