நாகர்கோவில், ஜூன் 20 –
சர்வதேச யோகா தினம் ஆண்டு வரும் ஜூன் 21ஆம் தேதி கடைக்கு பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதால் குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு துறைகளில் இன்று சனிக்கிழமை யோகா தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் போலீசார், தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்தனர்.
நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை காவலர்களுக்கான சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணை சூப்பரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பெண் போலீசார் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சூரிய நமஸ்காரம், வஜ்ராசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை அவர்கள் செய்தனர். பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்த சிறப்பு யோகாசன பயிற்சி அமைந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான யோகாசன நிகழ்சி வடசேரியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேயர் பிரின்சி லதா, நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜினி தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தினமும் கடின உழைப்பில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் உடலை தளர்த்தவும், சுவாசத்தை சீராக்க உதவும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.
மேலும் நாகர்கோவில் நகரில் உள்ள தனியார் பள்ளிகளில் யோகாசன தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. மாணவ மாணவிகள் வெள்ளை நிற சீருடை அணிந்து மைதானங்களில் வரிசையாக அமைந்து யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டனர். இது போன்று குமரி மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள் சார்பிலும் யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



