ஈரோடு, ஏப். 24 –
கொங்கு வேளாளர் இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்ட் சார்பில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அறக்கட்டளை சார்பில் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி, கொங்கு கலை அறிவியல் கல்லூரி, கொங்கு தொழில் பயிற்சி நிறுவனம், கொங்கு நேஷனல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, கொங்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும், அரசுப்பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கி கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முழு கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி பெருந்துறையில் கல்லூரி கலையரங்கில் நடந்தது.
இதில் சென்னை வருமானவரித்துறை ஆணையர் (வரிவிலக்கு) பிரேமானந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1504 மாணவர்களுக்கு ரூ.5.7 கோடி மதிப்பிலான பரிசுத் தொகையை வழங்கி பேசினார். அறக்கட்டளையின் தலைவர் தேவராஜன், செயலாளர் சத்திய மூர்த்தி, பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



