விளாத்திகுளம், மே 26 –
சென்னை வியாசர்பாடி சாமியார்தோட்டம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் இருவரும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சொந்த ஊரான வீரப்பட்டி கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு சென்னையிலிருந்து கோவில்பட்டிக்கு ரயிலில் வந்துள்ளனர். பின்னர் கோவில்பட்டியில் இருந்து கடலையூர் வழியாக ஒரு ஆட்டோ மூலம் தாங்கள் கொண்டு வந்த டிராவல் பேக், ஹேண்ட்பேக், சிறிய அளவிலான ஹேண்ட்பேக் ஆகியவற்றை ஆட்டோவின் பின்பகுதியில் வைத்து வந்துள்ளனர்.
பின்னர் வீரப்பட்டி வந்து இறங்கி பார்த்தபோது, ஆட்டோவின் பின் கதவு திறக்கப்பட்டு, சிறிய அளவிலான ஹேண்ட்பேக் மட்டும் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. தவறவிட்ட அந்த சிறிய வகை ஹேண்ட்பேக்கில் தான் வளையல், கம்மல், செயின், கைச்செயின், RED mi போன் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த சாந்தி மற்றும் பாலமுருகன் உடனடியாக எட்டையபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் எட்டையபுரம் போலீசார் ஹேண்ட் பேக்கில் உள்ள செல்போன் நம்பரின் லொகேஷன் சிக்னல் மூலம் பார்த்தபோது அந்த செல்போன் சிக்னல் கடலையூர் முதல் வீரப்பட்டி சாலையிலிருந்து சுமார் 30 மீட்டர் தூரத்தில் காட்டியுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது அந்த ஹேண்ட்பேக் மண்ணுக்குள் மூடி வைத்தபடி இருந்துள்ளது. இதனை அடுத்து மீட்டு வரப்பட்டு ஹேண்ட்பேக்கில் இருந்த 16 பவுன் தங்க நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை விளாத்திகுளம் டி.எஸ்.பி சுந்தரபாண்டியன், காவல்ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் அடங்கிய போலீசார் சாந்தி மற்றும் பாலமுருகனிடம் நகைகளை சரி பார்த்து ஒப்படைத்தனர்.
தவறவிட்ட 16 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை ஒரு மணி நேரத்தில் செல்போன் சிக்கனலை வைத்து மீட்ட காவல்துறையினருக்கு சாந்தி மற்றும் பாலமுருகன் தங்களின் நன்றிகளை தெரிவித்தனர். அதேபோல் தவறவிட்ட நகையை மண்ணுக்குள் புதைத்து வைத்த அந்த மர்மநபர் யார் என்பது குறித்து எட்டயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



