நாகர்கோவில், ஜூலை 8 –
கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட மாணவ மாணவியர்களுடன் காஃபி வித் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்துகொண்டு, மாணவ மாணவியர்களிடையே கலந்துரையாடினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்: மாணவர்கள் தங்களை எப்போதும் தாழ்த்தி மதிப்பிடக் கூடாது. தங்களின் இலக்குகள் எப்போதும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். உயர்ந்த இலக்குகளை நோக்கி உங்கள் பயணம் இருக்க வேண்டும். கல்வியை முடித்துவிட்டு ஏதோ ஒரு வேலைக்குச் சென்றால் போதும் என்ற குறுகிய எண்ணம் மாணவர்களிடம் இருக்கக் கூடாது. தங்களின் திறமைகளின் மீது சுய சந்தேகம் கொள்ளாமல், எப்போதும் பெரிய விஷயங்களை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். நமது இலக்கு உயரமாக இருந்தால் மட்டுமே, நம்மால் அடுத்தடுத்த நிலைகளை எட்ட முடியும். தங்களை தாழ்வாக நினைத்துக் கொண்டால், வளர்ச்சி தடைபடும்.
இலக்குகளை சரியாக தேர்ந்தெடுத்து, சரியான பாதையில் பயணிக்க வேண்டும். தேவையற்ற கவனச்சிதறல்களுக்கு இடம் கொடுக்காமல், படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்குள் ஒரு சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும். சுதந்திரம் என்பது நல்லது, ஆனால் அது தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது. வாழ்க்கையில் பெரிய இடங்களை அடைய வேண்டும். என பேசினார்.
தொடர்ந்து தமிழ் வழியில் பயின்று கல்வியிலும், கல்வி இணை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு வருடந்தோறும் காமராஜர் விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2024 – 25 ஆம் கல்வியாண்டில் தமிழ் வழியில் பயின்று, கற்றல் அடைவுகளிலும் கல்வி இணை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கிய நம்முடைய மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்த 15 மாணவர்களுக்கு காமராஜர் விருது பாராட்டு சான்றிதழும், ரூ.10,000 -க்கான காசோலையும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த 15 மாணவர்களுக்கு ரூ.20,000-க்கான காசோலையும் கலெக்டர் வழங்கினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



