கன்னியாகுமரி, நவ. 12 –
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலும் கடல் நடுவில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டம் ஆகியவற்றை காண விரும்புகின்றனர். தற்போது திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கு இடையே இரவு நேரங்களில் மின்னொளி வெளிச்சத்தில் திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலத்தை லேசர் ஒலி வெளிச்சத்தில் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக கரையில் இருந்து கடலுக்கு அடியில் ராட்சத ஒயர்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல் படகில் சென்று கண்ணாடி பாலத்தை காண முடியாத சுற்றுலா பயணிகள் கடற்கரையில் அமர்ந்து கண்டு களிக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருவள்ளுவர் சிலைக்கு மின்சாரம் திடீரென தடை பட்டது. ராட்சத அலைகளில் சிக்கி வயர்கள் பழுது காரணமாக ஒரு வாரமாக இரவில் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் மின்வாரியம் சார்பாக பழுது சரி செய்யப்பட்டு, மீண்டும் இணைப்பு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து திருவள்ளூர் சிலை ஒளிவள்ளத்தில் ஜொலித்தது.
இந்த நிலையில் மீண்டும் கடலலை காரணமாக வயர்கள் துண்டிக்கப்பட்டு, கடந்த நான்கு நாட்களாக திருவள்ளுவர் சிலைக்கு மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் மாலையில் இரு சூழ்ந்து காணப்படுவதால் கடற்கரையில் இருந்து திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலத்தை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே மின்சார வாரியம் முறையாக சரி செய்து, இரவு நேரங்களில் கடற்கரையில் அமர்ந்து வள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாதத்தை காண வழிவகை செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


