நாகர்கோவில், ஜூலை 30 –
கன்னியாகுமரி அருகே ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (34). மாற்றுத் திறனாளியான இவர் நாகர்கோவில் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து சிபிசிஐடி எஸ் பி ஷாஜிதா சிறைச்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினார்.
இந்த வழக்கில் சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறை காவலர் சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமும் சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் நாகராஜ் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இது தவிர 8 கைதிகள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் மரிய பிரான்சிஸ்கோ தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட சபரி வர்மன் கட்டி வைத்து தாக்கப்பட்டு இறந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தன.
இந்த நிலையில் தற்போது நடந்த விசாரணையில், சம்பவம் நடந்த இரவு சபரிவர்மன் சிறையில் இருந்து மனைவி குழந்தைகளை பார்க்க செல்ல வேண்டும் என்று சத்தம் போட்டு இருக்கிறார். அப்போது பணியில் இருந்த சிறை வார்டனிடம் மற்ற கைதிகள் புகார் தெரிவிக்கவே அவர் வந்து தாக்கியுள்ளார்.
இந்த நிலையில் சபரி வர்மனை தாக்கிய மற்ற 8 கைதிகளும் அன்று சமையல் வேலை முடித்துவிட்டு வந்துள்ளனர். அப்போது சபரி வர்மன் தொடர்ந்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என சத்தம் போட்டு உள்ளார். பின்னர் எட்டு கைதிகளும் புகார் செய்துவிட்டு, வார்டன் தூண்டுதலின் பேரில் சபரி வர்மனை தாக்கியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் சபரி வர்மனை அவர் கட்டியிருந்த லுங்கியால் இரண்டு கைகளையும் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். ஆனால் சபரி வருமன் கையில் கட்டி இருந்த லுங்கியை அவிழ்த்து இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த கைதிகள் லுங்கியை கிழித்து மீண்டும் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். பலமாக தாக்கிய நிலையில் அவர் இறந்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.



