கன்னியாகுமரி, ஜூலை 16 –
நாகர்கோவில் என்ஜிஓ காலனி கீழவண்ணான்விளை பகுதியைச் சேர்ந்த சதாசிவம் என்பவரின் மகன் குமார் (49). இவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து வழக்கின் தீவிரத்தையும், பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு நலனையும் கருத்தில் கொண்டு, குற்றவாளி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் குற்றவாளி குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, தற்போது சிறையில் உள்ள குற்றவாளி மீது குண்டர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான குற்றங்கள், பாலியல் குற்றங்கள், மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு வருகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.



