விளாத்திகுளம், பிப்ரவரி 12 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர் மாரியப்பன். இவர் வழக்கம் போல அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அருகில் ஜன்னல் ஓரத்தில் இருந்த பீரோவில் மேல் பகுதியில் இருந்து பாம்பு ஒன்று, மாரியப்பன் மேல் விழுந்தது மட்டுமின்றி அவரது வலது கையின் கட்ட விரலை கடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது.
இதனால் மாரியப்பன் மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்த ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாரியப்பன் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் அலுவலக ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் மாரியப்பனை கடித்த பாம்பினை நீண்ட நேரம் தேடிப் பார்த்தனர்.
ஆனால் அந்த பாம்பு கடைசி வரை அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தினால் புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சில நாட்களுக்கு முன்பாகத்தான் புதூர் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



