ஈரோடு, ஜூலை 16 –
ஈரோடு மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஸ்வஸ்திக் ரவுண்டானா பகுதியில், பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி. கிரண் ஸ்ருதி அவர்களின் உத்தரவின்பேரில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலும், உதவி ஆய்வாளர் சண்முக மூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், போக்குவரத்து சிக்னல்களை மதிக்க வேண்டும், செல்பேசி பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டக் கூடாது, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், அதிக வேகம், கவனக்குறைவு மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதால், ஒவ்வொருவரும் பொறுப்புடன் வாகனம் இயக்கி, சாலை பாதுகாப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இதுபோன்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் வடக்கு போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.



