தஞ்சாவூர், ஜூலை 15 –
தஞ்சாவூரில் பொதுமக்கள் அரசியல் கட்சியினர் சாலை அரசு சுவர்களில் அனுமதி இன்றி விளம்பர பேனர்கள் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதித்து மாநகராட்சி எச்சரிக்கையாக அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் அனுமதியின்றி விளம்பரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலை ஓரங்கள், சந்திப்புகள், அரசு கட்டிடங்கள், பஸ் நிறுத்தங்கள், தடுப்பு சுவர்கள், தனியார் நிலங்கள், மரங்கள் உள்ளிட்ட இடங்களில் விளம்பர பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள், விளம்பர அட்டைகள், எல்இடி விளம்பர பலகைகள் உள்ளிட்ட விளம்பரங்களை வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர் புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட திட்டங்களின்படி மாநகராட்சியின் முன் அனுமதி பெற்ற பின்னரே இத்தகைய விளம்பரங்களை அமைக்க வேண்டும். அனுமதி பெறாமல் விளம்பர பலகைகள், பதாகைகள், டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ், சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை வைப்பது சட்டவிரோதமான செயலாகும். மேலும் விதிமுறைகளை மீறி வைக்கப்படும் அனைத்து அனுமதியற்ற விளம்பரங்களும் மாநகராட்சி மூலமாக அகற்றப்படும் என்றும், அதற்கான செலவினமும், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இது போன்ற விதிமுறைகளில் ஈடுபடுவோர் மீது மாநகராட்சி சட்டப்பிரிவின் கீழ் முதல் முறையாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூபாய் 5000 முதல் 25,000 வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே பொதுமக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்பினரும் மாநகராட்சி விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி முன் அனுமதி பெற்ற பின்னரே விளம்பர பேனர்களை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



