கன்னியாகுமரி, ஜூலை 13 –
கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் சின்னமுட்டத்தை சேர்ந்த ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் கோவளத்தை சேர்ந்த 5 மீனவர்கள் நேற்று அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சிலுவை நகர் கடல் பகுதியில் இருந்து சுமார் 2 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை நாட்டுப் படகில் மோதி நிலைகுலைந்தது. அதில்நாட்டுப்படகில் இருந்த கோவளத்தை சேர்ந்த ராஜா (36) என்பவர் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் ராஜாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் கடல் சீற்றம் மற்றும் அலை காரணமாக அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
பின்னர் இதுகுறித்து அவர்கள் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கடலில் விழுந்து மாயமான ராஜாவை உள்ளூர் மீனவர்களுடன் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே நாட்டுப் படகில் தத்தளித்த மற்ற 4 மீனவர்களும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர். நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் ஒருவர் கடலில் விழுந்து மாயமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



