தஞ்சாவூர், மே 14 –
தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கூடுதல் இடவசதி ஏற்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் டாக்டர்களுடன் ஆய்வு நடத்தினார்.
அப்போது தேசிய நல வாழ்வு குழும குழந்தைகள் நல டாக்டர் சீனிவாசன் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றுக்கு போதுமான அளவு இட வசதி உள்ளதா? என்பது குறித்தும், கூடுதல் இடவசதி ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் டாக்டர்கள் மற்றும் பொது பணித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான தங்கும் வசதி, கழிவறை வசதி, மின் வசதி, குடிநீர் வசதி, ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ளிட்டவைகள் குறித்தும் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு மேற்கொண்டார். மேலும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கான அடிப்படை வசதிகளை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலசுப்பிரமணியன் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையின் நிலைய டாக்டர் அமுதவல்லி அமுதவடிவு, குழந்தைகள் நல டாக்டர் செல்வகுமார், மகளிர் நலன் மற்றும் மகப்பேறு டாக்டர் அமுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



