தருமபுரி, ஜூலை 06 –
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள கோட்டை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி குணசேகரன் (37) மாற்று திறனாளியான இவரின் மனைவியும் வாய் பேச முடியாத மாற்று திறனாளியாவர். இவர் தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்க கோரி கடந்த 2022ம் ஆண்டு பேரூராட்சி நிர்வாகத்திற்கு மனு செய்தார். பேரூராட்சி நிர்வாகத்தின் ஆலோசனைப்படி குடிநீர் இணைப்பு வழங்க ரூ.14,500க்கான வங்கி வரைவோலையை வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட பேரூராட்சி நிர்வாகம் மேலும் ரூ. 5,000 வழங்கினால் தான் குடிநீர் இணைப்பு தர முடியும் என கட்டாயப்படுத்தி உள்ளனர்.
குணசேகரன் குடிநீர் இணைப்பிற்கு கட்ட வேண்டிய பணம் கட்டி விட்டதாகவும், மேலும் கொடுக்க தன்னிடம் பணம் இல்லை என கூறி குடிநீர் இணைப்பு தர மன்றாடி உள்ளார். ஆனால் கடந்த 4 வருடங்களாக இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. குடிநீருக்காக போராடி வரும் இவர் மாற்று திறனாளி என்பதால் நீண்ட தூரம் சென்று தண்ணீர் கொண்டு வர பெரும் சிரமம் அடைந்து வருவதாகவும், தனக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இது குறித்து பாலக்கோடு சமூக ஆர்வலர் சிவா கூறும் போது: பாலக்கோடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் இணைப்பிற்கு பணம் கட்டி கடந்த 4 ஆண்டுகளாக காத்திருப்பதாகவும், கூடுதல் பணம் தராததால் பேரூராட்சி நிர்வாகம் வேண்டும் என்றே குடிநீர் இணைப்பு தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், எனவே பேரூராட்சி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் இணைப்பிற்காக பணம் கட்டிய அணைவருக்கும் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என பி. கே. சிவா சமூக ஆர்வலர், குணசேகரன் மாற்றுத்திறனாளி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



