நாகர்கோவில், ஆகஸ்ட் 22 –
நாகர்கோவிலில் மாநகர பகுதிகளில் கட்டண கழிப்பிடங்களில் பொது மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான வடசேரி கிரிஸ்டோபர் பஸ் நிலையத்தில் கட்டண கழிவறை செயல்பட்டு வருகிறது. கட்டண கழிவறையில் கட்டணம் வசூல் செய்திடும் உரிமத்தினை குத்தகை எடுத்து நடத்தி வரும் குத்தகைதாரர் பொது மக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்வது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உடனடியாக குத்தகைதாரருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் குத்தகை உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மாநகர பகுதிகளில் உள்ள கட்டண கழிப்பிடங்களில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்பதற்கான செல்போன் எண் அனைத்து கட்டண கழிப்பிடங்களிலும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் எழுதி வைக்கப்பட வேண்டும் என்றும் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


