தூத்துக்குடி, பிப். 9 –
மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க, ஆதார் அட்டை அடிப்படையில் மட்டுமே மது வழங்க வேண்டும் என வலியுறுத்தி, உடலில் மது பாட்டில்களைக் கட்டிக்கொண்டு சமூக ஆர்வலர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன், மதுவிற்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். முன்னதாக, காலி மது பாட்டில்களை அரசு டாஸ்மாக் கடைகளிலேயே திரும்பப் பெற வேண்டும் என்ற இவரது போராட்டம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பாலகிருஷ்ணன், தனது உடலில் மூன்று மது பாட்டில்களைக் கயிறு மூலம் கட்டியிருந்தார். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது: “தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு அளவில்லாமல் மது வழங்குவதால், குடிமகன்களின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் பல குடும்பங்கள் சீரழிவு, சிதைவதோடு, இளம் பெண்கள் விதவையாகும் அவலநிலை ஏற்படுகிறது.
னவே, மதுப்பிரியர்களுக்கு ஆதார் அட்டை அடிப்படையில் குறைந்த அளவு மதுவை மட்டுமே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மது பாட்டில்களுடன் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற பாலகிருஷ்ணனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். உடலில் கட்டப்பட்டுள்ள பாட்டில்களை அகற்றுமாறு அவர்கள் உத்தரவிட்டனர். அதற்கு அவர், “என்னால் கழற்ற முடியாது, நீங்களே கழற்றிக் கொள்ளுங்கள்” எனக் கூறவே, போலீசாருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இறுதியில், காவல்துறையினர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் இணைந்து அவரது உடலில் கட்டப்பட்டிருந்த மது பாட்டில்களைப் போராடி அகற்றினர். ஆட்சியர் அலுவலகத்திற்கு இது போன்ற பொருட்களுடன் வரக்கூடாது எனப் பாலகிருஷ்ணனை எச்சரித்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க அவரை அனுமதித்தனர்.இந்த நூதனப் போராட்டத்தால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



