விளாத்திகுளம், டிசம்பர் 27 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி, சின்னூர் மாவில்லோடை, என்.ஜெகவீராபுரம், உத்தாண்டாபுரம் கழுதாசலாபுரம், வெங்கடாசலாபுரம், குமாராபுரம், சுப்பிரமணியபுரம், V. சுப்பையாபுரம், பூதலாபுரம், சங்கரப்பநாயக்கன்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, கந்தசாமிபுரம், புதுசின்னையாபுரம், பி.ஜெகவீரபுரம், மாதலாபுரம் துரைச்சாமிபுரம் குமாரலிங்கபுரம் L. V.புரம் சென்னம்பட்டி உள்ளிட்ட 40 கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகள் மருத்துவம், பள்ளி, கல்லூரிகளுக்கு விளாத்திகுளம் செல்வதற்கும் புதூர் செல்வதற்கும் கடல்குடி முதல் புதூர் வரை உள்ள சாலை மற்றும் சின்னூர் கிராமத்திலிருந்து என்.ஜெகவீரபுரம் வழியாக புதூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த இரண்டு சாலைகளும் கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக முறையான பராமரிப்பு இல்லாமல், சாலையின் இரண்டு பக்கமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வனம் போல் காட்சியளிப்பதால், இருசக்கர வாகனங்களை விலக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. சாலைகள் மிகவும் சேதம் அடைந்து இருப்பதால் லேசான மழைக்கு குண்டும் குழியமாக உள்ள சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவில் அடிக்கடி விபத்துக்குள்ளாகி காயம் ஏற்பட்டு வருகின்றனர். அவசர உதவிக்காக விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை அழைத்தால், 108 வாகனமும் உரிய நேரத்தில் வர முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவே சாலையின் இரு பக்கமும் உள்ள சீமை கருவேலம் மரங்களை அகற்றி சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைத்து தரவேண்டும் என்று 40 கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



