நாகர்கோவில், ஜூலை 3 –
குமரி மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் இளம் பேரிடர் நண்பர் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயர் கல்வி மைய கலையரங்கில் இன்று நடைபெற்றது.
இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பேசியதாவது: தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, பேரிடர் மேலாண்மை மற்றும் அவசரகால மீட்புப் பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கில் நடத்தப்பட்டு வரும் “யுவ ஆப்த மித்ரா” பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த இளம் தன்னார்வலர்கள் ஏராளமானோர் இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ளீர்கள். மழைக்காலங்களில் பேரிழப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக வெள்ளம், கடல்சீற்றம், புயல், தீ விபத்து போன்ற இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரிடர்களின் போது, அதிகாரப்பூர்வ மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரும் முன்னரே, உள்ளூர் மட்டத்திலிருக்கும் இளைஞர்கள் முதல் கட்ட மீட்புப் பணிகளை எவ்வாறு துரிதமாகச் செய்ய வேண்டும் என்பதற்கான செயல்முறைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி முகாமானது இன்றிலிருந்து மூன்றுநாட்கள் வரை நடைபெறும். எனவே அனைத்து தன்னார்வலர்களும் இப்பயிற்சி முகாமினை நன்கு பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். பேரிடர் காலங்களில் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து முன்னேச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் என கூறினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா, நூருல் இஸ்லாம் உயர் கல்வி மைய பேரிடர் மேலாண்மை துணை வேந்தர் முனைவர் ஜெசி தாமஸ், இணை துணை வேந்தர் ஜனார்த்தன், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



