விளாத்திகுளம், ஜூன் 25 –
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த ஆத்தியப்பன் என்பவரின் மகன் விஜய் (25). இவர் தனது உறவினரின் திருமணத்திற்காக விளாத்திகுளம் அருகே உள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தில் இருந்து, கே.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நவீன்குமார் (18) மற்றும் கடால்குடி, பூசனூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் (26), மாரிமுத்து (39), கண்ணன் (40) நான்கு பேரையும் அழைத்துக் கொண்டு கே.துரைசாமிபுரம் கிராமத்திலிருந்து விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இடைச்சியூரணி கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் இருந்த சிறிய பாலம் மீது மோதி கார் தூக்கி வீசப்பட்டு பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரை கோவில்பட்டியை சேர்ந்த விஜய் என்பவர் மது போதையில் ஓட்டியதாகவும், கே.துரைச்சாமிபுரம் கிராமத்தில் இருந்து கிளம்பும்போதே, கார் அசுர வேகத்தில் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த காரை நேராகத் திருப்பி வைத்து காரில் இருந்தவர்களை மீட்டு உடனடியாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



