சேலம், ஜுன் 22 –
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்றும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் மீண்டும் வராத வகையில் மனுக்களின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
அந்த அடிப்படையில் இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சாதிச் சான்று, வேலைவாய்ப்பு, வங்கி கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதி உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட பொதுமக்களின் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 630 மனுக்கள் பெறப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் இல்லாமல் மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற்றது. அதில் 23 மனுக்களை மாற்றுத்திறனாளிகள் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல்கள் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக அக்கு கட்டைகள், ஒரு மாற்றுத்திறனாளிக்கு நிற்க உதவும் உபகரணம் என ஐந்து மாற்றத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் வழங்கினார்.



