நாகர்கோவில், ஏப். 30 –
கன்னியாகுமரியில் மாயமான இரண்டு இளம் பெண்கள் வாவத்துறை தூண்டில் வளவு கடல் பகுதியில் சடலமாக கண்டெடுப்பு. உடலை கைப்பற்றி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கோடை விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கேரளம் மாநிலத்திலிருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்து காணாமல் போன சகோதரிகளை கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை கன்னியாகுமரி வாவத்துறை தூண்டில் வளைவு பகுதியில் கடலில் மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய மீனவர்கள் இரண்டு உடல்கள் தூண்டில் வளைவுக்குள் சிக்கியிருப்பதை கண்டு கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உடன் வாவத்துறை தூண்டில் வளைவு பகுதிக்கு விரைந்து சென்று மீனவர்கள் உதவியுடன் பாறையில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
பின்பு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் காணாமல் போன இரண்டு இளம் பெண்கள் இவர்கள் தான் என்று உறுதி அளித்த பின்பு உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கேரளம் மாநிலம் கோட்டயம் மாவட்டம் குறிகாட்டில், கிடங்கூர் பகுதியை சேர்ந்தவர் பிலிப், இவரது மனைவி மேரி. இந்த தம்பதியினருக்கு எலிசபெத் பிலிப், ஆனி பிலிப், மீரா பிலிப் ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான எலிசபெத் பிலிப் திருமணம் ஆகி லண்டனில் வசித்து வருவதாகவும், ஆனி பிலிப் (வயது 35) என்பவர் எக்ஸ்ரே டெக்னீசியன் படித்துவிட்டு அமெரிக்கா வில் வேலை பார்த்து வருவதாகவும் அவரது தங்கையான மீரா பிலிப் (32) என்பவர் என்ஜினீயரிங் படித்து விட்டு அமெரிக்காவில் வேலை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இருவரும் கடந்த 15 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருவதாகவும், வருடத்துக்கு ஒரு முறை தங்களது சொந்த ஊரான கேரளம் மாநிலம் கோட்டயத்துக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இருவரும் இந்தியா வந்துள்ளனர். பின்னர் அவர்கள் ராமேஸ்வரம், மதுரை போன்ற இடங்களை சுற்றி பார்த்துவிட்டு கடந்த 26 ஆம் தேதி மாலை கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் 2 பேரும் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
அங்கிருந்து வெளியே சென்றவர்கள் அந்த தங்கும் விடுதிக்கு 2 நாட்களாக திரும்பி வரவில்லை. இதனால் லாட்ஜ் ஊழியர்கள் அவர்கள் கொடுத்த செல்போன் நம்பரை வைத்து இளம் பெண்களின் தாயார் மேரி என்பவரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். சகோதரிகளின் தந்தையான பிலிப்பின் அண்ணன் ஷிஷு என்பவரும், அவர்களது உறவினர்களும் கன்னியாகுமரிக்கு வந்து மாயமான சகோதரிகளை குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்து ஷிஷூ கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன அக்காள்-தங்கை இருவரையும் கன்னியாகுமரி போலீசார் தேடி வந்த நிலையில் இன்று அவர்கள் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



