தேனி, ஜூன் 17 –
தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பரமசிவம் கோவில் வீதியில், பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் 10-க்கும் மேற்பட்ட வணிகக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளை அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய வியாபாரிகள் கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலம் எடுத்து, அதற்கான வருட வாடகையையும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு முறையாகச் செலுத்தித் தங்களது வாழ்வாதாரத்தைக் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென இக்கடைகளுக்கான மின்சார வயர்கள் (EB Lines) துண்டிக்கப்பட்டு, அறுத்தெறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கடைகளை நடத்த முடியாமல் அன்றாடப் பிழைப்பிற்கே வழியின்றி தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிப் போயுள்ளதாகப் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வியாபாரிகளின் கண்ணீர் பேட்டி
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் கண்ணீர் மல்கத் தெரிவிக்கையில், “நாங்கள் கடந்த 24 வருடங்களாக எவ்வித வாடகை பாக்கியும் இன்றி, அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையை முறையாகச் செலுத்தி வருகிறோம். தற்போதைய நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் எத்தனையோ நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சிறிய நீர்நிலை மட்டுமே நிரம்பி ஊரை அழிக்கப் போகிறதா?
திடீரென மின் இணைப்பைத் துண்டித்து எங்களை வெளியேற்ற நினைப்பதால், எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. நடப்புக் கல்வி ஆண்டில் தங்களது பிள்ளைகளை எப்படிப் பள்ளியில் சேர்ப்பது, அவர்களுக்கான பள்ளி உறைவிடக் கட்டணங்களை (School Fees) எவ்வாறு செலுத்துவது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். பிள்ளைகளின் எதிர்காலமே இருண்டுவிடும் சூழல் உருவாகியுள்ளது” எனத் தங்களது குமுறல்களை முன்வைத்தனர்.
ஆட்சியருக்குக் கோரிக்கை
தேனி மாவட்டத்தில் பல்வேறு அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளுக்குத் உடனுக்குடன் தீர்வு கண்டு வரும் மாவட்ட ஆட்சியர் அவர்கள், இந்த விவகாரத்திலும் நேரடியாகத் தலையிட வேண்டும். 24 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் நசுக்காமல், துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து தங்களது வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.



