திருவண்ணாமலை, நவ. 3 –
திருவண்ணாமலையில் மாட வீதியை சுற்றி வசிப்பவர்களின் கார்களுக்கு கியூ ஆர் கோடு உள்ள அட்டைகளை ஒட்டும் பணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருணாநிதி மேற்பார்வையில் நடைபெற்றது. திருவண்ணாமலை நகரில் போக்குவரத்தை நெரிசலை சரி செய்யும் பொருட்டு மாடவீதியில் பஸ்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கார்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக சொந்தப் பயன்பாட்டுக்கு கார் வைத்துள்ள மாட வீதியை சுற்றி உள்ளவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு கார் பாஸ் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக வட ஒத்தவாடைத் தெரு, தென் ஒத்தவாடைத் தெருக்களில் வசிப்பவர்களின் கார்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் துவக்கி வைத்தார்.
இந்நிலையில் அடுத்த கட்டமாக மற்ற கார்களுக்கும் கியூ ஆர் கோடு அட்டை ஒட்டும் பணி பெரிய தெரு மேட்டில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.கருணாநிதி மேற்பார்வையில் நடைபெற்றது. மொத்தம் 457 கார்களில் இதுவரை 410 கார்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை ஒட்டப்பட்டு உள்ளது என்றும், இதேபோல் 3530 ஆட்டோக்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை ஒட்டப்பட்டு இருப்பதாகவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.கருணாநிதி கூறினார்.



