களியக்காவிளை, ஜூன் 17 –
தமிழ்நாடு முழுவதும் தெரு நாய் தொல்லைகளைக் கட்டுப்படுத்த மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், உள்ளாட்சி மன்றங்கள் சார்பில் நாய்களைப் பிடிக்கும் பணி மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட படந்தாலுமூடு, மீனச்சல் பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இருந்து பேரூராட்சி ஊழியர்களின் உதவியுடன் தெரு நாய்களை பிடிக்கும் பணி இன்று நடைபெற்றது. பிடித்த நாய்களை குழித்துறை பகுதியில் உள்ள கருத்தடை மையத்தில் பேரூராட்சி வாகனம் மூலம் கொண்டு சென்றனர்.
தொடர்ந்து அவற்றிற்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, 3 நாட்கள் கண்காணித்த பிறகு அதே இடத்தில் திரும்ப கொண்டு விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



