நாகர்கோவில், ஜூன் 15 –
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனைத் தடுத்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வாகனங்கள் திருடப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைத் தனிப்படை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் மூலம் வாகனத் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வகையில் கோட்டார் காவல் நிலைய இரண்டு வழக்குகளில் குற்றவாளியான தூத்துக்குடி மாவட்டம் மேலூர் பகுதி சேர்ந்த அஜித்குமார் (28) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
வடசேரி காவல் நிலைய குற்ற வழக்கின் குற்றவாளியான அதே அஜித்குமார் (28) என்பவரிடம் இருந்து மேலும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அஞ்சுகிராமம் காவல் நிலைய வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மகன் செல்வராஜ் (31) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கின் குற்றவாளியான திருவட்டார் சத்துவிளை தோப்பு பகுதி மஜின் (26) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.


