தருமபுரி, ஜூன் 08 –
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சின்னசாமி (49) என்பவர் மது பாட்டில்களை பதுங்கி வைத்துவிற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும் அரூர் காவல்துறையினர் நாச்சினாம்பட்டி ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த மூன்று வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் அரூரை சேர்ந்த மணிகண்டன் (26), அருண்குமார் (26), சதீஷ் குமார் (29) என்பதும், விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


