நாகர்கோவில், ஜுன் 01 –
ரோட்டரி இயக்கம் சார்பில் கிராமங்களை தத்தெடுத்து கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு இலவச கழிப்பறை அமைத்து கொடுக்க ஏற்பாடு மாவட்ட ஆளுநர் காந்தி கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
23 சட்டமன்ற உறுப்பினர்கள்:
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ரோட்டரி இயக்கத்தைச் சேர்ந்த 23 ரோட்டேரியன்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ரோட்டரி உலகிற்கு மிகுந்த பெருமையளிக்கிறது. மொத்த உறுப்பினர்களில் சுமார் 10 சதவீதம் ரோட்டேரியன்கள் இடம்பெற்றிருப்பது, சமூக சேவையில் ஈடுபட்டவர்களின் மீது மக்களிடம் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, ரோட்டரி மாவட்டம் 3212-ஐச் சேர்ந்த மூன்று ரோட்டேரியன்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
பாராட்டு விழா:
அவர்களைப் பாராட்டும் வகையில், வருகிற ஜூன் 6-ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் மிகப் பிரம்மாண்டமான பாராட்டு விழாவை தமிழகத்தில் உள்ள அனைத்து சங்கங்களும் சேர்ந்து ரோட்டரி சார்பில் நடத்த உள்ளோம். இதில் மாநிலம் முழுவதிலுமிருந்து ரோட்டேரியன்களும், சமூக ஆர்வலர்களும் பங்கேற்க உள்ளனர்.
மேலும், இன்று எங்கள் மாவட்டத்தின் எதிர்கால தலைவர்களை உருவாக்கும் நோக்கில் “கிளப் லீடர்ஷிப் லேர்னிங் செமினார்” நடைபெற்று வருகிறது. இதில் 125 ரோட்டரி சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று, சிறந்த தலைமைத்துவம், உறுப்பினர் வளர்ச்சி, சேவைத் திட்டங்கள் மற்றும் ரோட்டரியின் நோக்கங்களை திறம்பட செயல்படுத்துவது குறித்து பயிற்சி பெற்று வருகின்றனர். இது வரவிருக்கும் ரோட்டரி ஆண்டிற்கான வலுவான அடித்தளமாக அமையும்.
புதிய திட்டம் அறிமுகம்:
ஜூலை 1ம் தேதி முதல் ரோட்டரி மாவட்டம் 3212-ன் மாவட்ட ஆளுநராக நான் பொறுப்பேற்க உள்ளேன். சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஏழு வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்தப் பகுதிகளில் 125 ரோட்டரி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. எனது ஆளுநர் ஆண்டிற்கான மிக முக்கியமான திட்டமாக Serving the Roots என்ற திட்டத்தை அறிவிக்கிறோம். இந்தத் திட்டத்தின் கீழ், எங்கள் 125 ரோட்டரி சங்கங்களும் 125 பின்தங்கிய கிராமங்களைத் தத்தெடுத்து, அவற்றின் முழுமையான வளர்ச்சிக்காக செயல்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.
அதன் முக்கிய அம்சங்கள்:
கழிப்பறை வசதி இல்லாத வீடுகளுக்கு தனிநபர் கழிப்பறைகள் அமைத்தல்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்குதல்.
இளம் விதவைகள், குடும்பத்தை நடத்தப் போராடும் பெண்கள் மற்றும் வேலைவாய்ப்பு தேவைப்படும் பெண்களுக்கு “பிங்க் ஆட்டோ” வழங்கி சுயதொழில் வாய்ப்பை உருவாக்குதல்.
குடிநீர், கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கான பல்வேறு சேவைத் திட்டங்களை செயல்படுத்துதல்.
இந்த அனைத்து திட்டங்களும் ரோட்டேரியன்களின் பங்களிப்பு, நன்கொடையாளர்கள், தொழில் நிறுவனங்களின் CSR நிதி மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும். ரோட்டரி என்பது வெறும் அமைப்பு அல்ல; அது மனிதநேய சேவையின் இயக்கம். அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு துணையாக, சமூகத்தின் கடைசி மனிதரையும் சென்றடையும் வகையில் எங்கள் சேவைகளை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளோம்.
சேவை செய்யும் கரங்கள், பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட உயர்ந்தவை” என்ற ரோட்டரியின் தத்துவத்தை முன்னிறுத்தி, மக்களின் வாழ்க்கையில் நிலையான மாற்றத்தை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என அவர் தெரிவித்தார். இதில் மாவட்ட ஆளுநர் காந்தி கிருஷ்ணன், சேர்மன் கர்பூர், செயலாளர் செல்வம், மாவட்ட செயலாளர் நந்து, துணை ஆளுநர் சிவகுமார் ராஜா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



