கோவை, மே 28 –
தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் பங்கேற்றது முதல் திமுகவினர் தூக்கத்தை இழந்து தவிக்கிறார்கள்! வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற கதையாக ஆத்திரத்தின் உச்சத்தில் நின்று கொண்டு உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
திமுக கூட்டணியில் வெற்றி பெற்றதால் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சூடு, சொரணை இருந்தால் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி. 1999 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து திமுக போட்டியிட்டது. அடுத்த ஆண்டே வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தது இதே திமுகதான்.
தமாகா, இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் வாக்குகளைப் பெற்றுவிட்டு பாஜகவுக்கு எதிரான மக்கள் தீர்ப்பை எறிந்து விட்டு பாஜகவை ஆதரித்தீர்களே? அப்போது சூடு, சொரணையை பாஜகவிடம் அடகு வைத்தீர்களா? மாணிக்கம் தாகூரை ராஜினாமா செய்யச் சொல்ல திமுகவினருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் உங்களைக் கழுவிக் கழுவி ஊற்றிய எடப்பாடியை முதலமைச்சராக்க முயன்றீர்களே, அப்போது எங்கே போனது சூடு, சொரணை. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே பல தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்குக் காங்கிரஸ் தான் காரணம். சூடு சொரணை இருந்தால் திமுக எம்எல்ஏக்கள் எல்லாம் ராஜினாமா செய்யத் தயாரா?
அதே சமயம், கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காத, திமுகவை தீய சக்தி என்று வசை பாடிய, உதயநிதியை பால்டாயில் என்று அசிங்கப்படுத்திய, ஸ்டாலினை பொம்மை முதல்வர் என்று விமர்சித்த எடப்பாடியை முதலமைச்சராக்கத் துடித்தீர்களே? அன்று தான் வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாவற்றையும் நீங்கள் தொலைத்தீர்கள்.
திமுகவோடு எடப்பாடி பழனிசாமி கைகோர்க்கிறார் என்று தெரிந்து கொதித்து எழுந்து 3 அதிமுகவினரும் எம்எல்ஏ பதவியை தூக்கி எறிந்தனர். அந்த 3 அதிமுகவினரும் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி கூறுவது போல் உண்மையிலேயே சூடு, சொரணை உள்ளவர்கள் தான்.
அதிமுகவினரைப் போல் சூடு, சொரணை இருந்தால் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவுடன் வென்ற திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் காங்கிரஸ் பேரியக்கத்தை சிறுமைப்படுத்த முயன்றால் பதிலடி பலமாக இருக்கும் என்பதை திமுகவினருக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.



