தருமபுரி, ஜூன் 22 –
தருமபுரி நகராட்சியில் பணி செய்யும் தூய்மை காவலர்கள் வழக்கம் போல் தருமபுரி நகரப் பகுதியை தூய்மை செய்து கொண்டு இருந்தனர். அப்போது குட்டிகளை ஈன்றெடுத்த நாயை யாரோ ஒரு நபர் கத்தியால் அந்த நாயின் வாயில் வெட்டி உள்ளார். நாய்க்குட்டிகளுக்கு ஒரு அம்மாவாக இருந்து பால் கொடுத்து வரும் இந்த வாயில்லா ஜீவனுக்கு ஏற்பட்ட காயத்தை பார்த்து மனம் துவண்டு போன தூய்மை காவலர்கள் உடனடியாக நகராட்சி தூய்மை ஆய்வாளர் சுசீந்திரனை தொடர்பு கொண்டனர்.
அவரின் அறிவுறுத்தல் படி தருமபுரி ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள மருத்துவர் மாதப்பனை தொடர்பு கொண்டார். அவர் உடனடியாக நாயை கொண்டுவரச் சொல்லி இலவசமாக மருத்துவம் செய்தார். இதுபோன்று வாயில்லா ஜீவனை கொடுமைப்படுத்தும் மனித மிருகங்கள் வாழும் இந்த உலகத்தில் தான் மனிதநேயமிக்க பல மனிதர்களும், தூய்மை காவலர்களும் வாழ்கின்றனர்.
தருமபுரி நகராட்சி தூய்மை காவலர்கள் சக்கரவேல், சிந்து குட்டி, செல்வராஜ் ஆகியோருக்கு மை தருமபுரி அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.



