மார்த்தாண்டம், ஜூன் 20 –
கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது தாரிக் அல் அமீன் தலைமையிலான போலீசார் நேற்று தெருவுகடை சந்திப்பு பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
வாகனத்தை ஓட்டி வந்தவர் தக்கலை அருகே உள்ள மருதூர்குறிச்சி பகுதி சேர்ந்த 17 வயது கேட்டரிங் கல்லூரி மாணவர் என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரது வாகனத்தை போலீசார் சோதனை செய்தபோது, அதில் எவ்வித அனுமதி இன்றி பேராபத்தை விளைவிக்க கூடிய வெடி பொருட்கள் மறைத்து கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் 24 எலக்ட்ரிக்கல் டெட்டனேட்டர்கள், 3 சாதாரண டெட்டனேட்டர்கள் மற்றும் 50 ரெக்ஸ், 90 ஜெல் வெடிமருந்து குச்சிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் இருந்து கிணறு வெட்டுவதற்காகவும், அதில் உள்ள பாறையை உடைப்பதற்கும் பயன்படுத்துவதற்காக இந்த வெடிபொருள்களை கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.
இதை எடுத்து சிறுவனை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தேடுவது அறிந்தவுடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.


