திருப்பூர், மே 23 –
திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுகவில் அதிரடி திருப்பமாக, முக்கிய நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட 125 பேர் ஒரே நேரத்தில் கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க செயலாளரும், கவுன்சிலருமான நாகராஜ் தலைமையில் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களான குமார், வசந்தாமணி உள்ளிட்ட 125 பேர் மதிமுகவிலிருந்து விலக முடிவெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கோபிசெட்டிபாளையத்தில் தவெக மாநில நிர்வாகி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.
இந்த இணைப்பின் மிக முக்கிய அம்சமாக, திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணி நிர்வாகிகள், அவைத் தலைவர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் என அடிமட்டத் தொண்டர்கள் முதல் உயர் நிர்வாகிகள் வரை அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் மதிமுகவிலிருந்து விலகியுள்ளனர். ஒரே மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும், கிளைச் செயலாளர்களும் மொத்தமாக மாற்றுக்கட்சிக்கு மாறுவது என்பது அந்தப் பகுதியில் மதிமுகவிற்கு விழுந்த பலத்த அடியாகவே பார்க்கப்படுகிறது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், திருப்பூரில் மதிமுகவின் முக்கிய தூண்களாகக் கருதப்பட்ட மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் மற்றும் கவுன்சிலர்களும், நிர்வாகிகளும் கூட்டமாக விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது, திருப்பூர் மாவட்ட மதிமுக தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி அரசியல் மாற்றம் காரணமாக திருப்பூரில் தவெகவின் பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.



