தேனி, மே 20 –
தமிழ்நாட்டில் உள்ள சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த நபர்களின் சமூக, பொருளாதார, மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக அரசால் சீர்மரபினர் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை (10ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ பாலிடெக்னிக் படிப்பு மற்றும் தொழிற்கல்வி பட்ட படிப்பு), முதியோர் ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, கண் கண்ணாடி உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, திருமண உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நேர்வில் 01.04.2026 முதல் சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை, புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் பரிந்துரை செய்தல் ஆகியவற்றை இணையவழி மூலம் நடைமுறைப்படுத்தும் பொருட்டு தமிழக மின் ஆளுமை முகமை மூலம் இணையவழி சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
எனவே இனிவரும் காலங்களில் 18 வயது பூர்த்தியடைந்த 60 வயதிற்குட்பட்ட சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் நலவாரியத்தில் புதியதாக உறுப்பினராக பதிவு செய்வதற்கும், ஏற்கனவே பதிவு பெற்ற உறுப்பினர்கள் தங்களது பதிவினை புதுப்பிப்பதற்கும் மற்றும் மேற்குறிப்பிட்டுள்ள நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் https;//www.dncwb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் கைப்பேசி எண் மூலம் உள்நுழைந்து உறுப்பினர் சேர்க்கை / நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் தகுந்த சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மனுதாரர்கள் இ- சேவை மூலமாக இணையவழியில் விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.



