நாகர்கோவில், ஏப். 27 –
நாகர்கோவில், மேலப்பெருவிளையைச் சேர்ந்த சகாய ராஜன் – ராதிகா ஆகியோரின் மகன் சஞ்ஜெய். இவர் ஆசாரிப்பள்ளம் பெல்ஃபீல்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் மேலப்பெருவிளை மூவேந்தர் பயிற்சிப் பள்ளியில் மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட, மாநில அளவிலான மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். மேலும் சிலம்பம், மாரத்தான் ஓட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது 17 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்குத் தேர்ச்சி பெற்று மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளார்.
விளையாட்டுத் துறையுடன் அறிவியல் துறையிலும் திறமை வெளிப்படுத்திய சஞ்ஜெய் குமரி அறிவியல் பேரவை நடத்திய 2023-2024 ஆம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருதையும் பெற்றுள்ளார். சஞ்ஜெயின் இந்த சாதனைக்கு மூவேந்தர் பயிற்சிப் பள்ளி மாஸ்டர், கோச், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


